தமிழ்நாடு

பொதுமக்களிடம் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள்: காவலர்களுக்கு கமிஷனர் அறிவுரை

rajakannan

விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம், பொறுமையுடன் பேசி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

நெல்லை சங்கரன்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் என்‌பவர் தாம்பரத்தில் தங்கி கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்திருக்கிறார். நேற்று ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து திருவான்மியூர் நோக்கி மணிகண்டன் தனது கால் டாக்சியில் வந்தபோது, சீட் பெல்ட் அணியாததைக் கண்ட போக்குவரத்து காவல்துறையினர் அவரை அடித்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

அதனால், தனது செல்போ‌ன் மூலம் வாக்குமூலம் அளித்துவிட்டு மணிகண்டன் நடுரோட்டில் தீக்குளித்தார். அதையடுத்து, காவல்துறையினர் அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ‌இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் விஸ்‌வநாதன் உறுதி அளித்தார். 

இந்நிலையில், கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மணிகண்டனின் தாயார் வசந்தா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தன் மகனை அவமானப்படுத்தியும், தாக்கியும் தற்கொலைக்கு தூண்டிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இதனையடுத்து, கால் டாக்சி ஓட்டுனர் தீக்குளிப்பு சம்பவத்தையடுத்து போக்குவரத்து காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.  அதில், பொதுமக்களிடம் அமைதியாகவும், சட்ட ரீதியாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று போக்குவரத்து உதவி ஆய்வாளர்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். 

விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம், பொறுமையுடன் பேசி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.