தமிழ்நாடு

பிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..!

Rasus

சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்தின் போது பேருந்து கூரையிலிருந்து கீழே விழுந்து மாணவர்கள் அடிபட்டுக் கொண்டனர்.

ஏப்ரல், மே மாதங்களில் கொ‌ஞ்சம் நிம்மதியாக இருக்கும் சென்னை மக்களும், மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்களும் ஜூன் மாதத்தில் இம்சையை சந்திக்க தொடங்கியுள்ளனர். காரணம் கல்லூரி மாணவர்கள். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி நேற்று தொடங்கிய நிலையில் மாணவர்களின் அட்டூழியம் பேருந்துகளில் தொடங்கியது. சட்டவிரோதமாக பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் மாநகரப் பேருந்துகளையும், அதிலிருந்தவர்களையும் பாடாய்ப்படுத்திவிட்டனர். மாணவர்களின் இந்த அட்டூழியத்தின் போது ஒரு விபரீதமும் நடந்தேறியது.

அரசு மாநகரப் பேருந்தின் பேருந்தின் கூரையில் சுமார் 20 மாணவர்கள் அமர்ந்தவாறு கூச்சலிட்டபடி சென்றனர். பேருந்தின் எண் கொண்ட பலகையையும் அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர். அப்போது பேருந்தின் முன் பைக்கில் சென்று கொண்டிருந்த இரு மாணவர்கள் திடீரென பிரேக் போட்டனர், இதையடுத்து பேருந்து ஓட்டுநரும் பிரேக் போட்டதால் மேலே அமர்ந்திருந்த மாணவர்கள் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டனர். கீழே விழுந்த மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

பேருந்து தின ரகளையில் ஈடுபட்ட பிற மாணவர்களையும் காவல்துறையினர் விசாரித்து பின்னர் எச்சரித்து அனுப்பினர். இச்செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்களின் வாழ்வே வீணாகிவிடும் என்றும் எனவே அவர்கள் இதுபோன்று செய்வதை கல்லூரிகள் தடுக்க வேண்டும் என்கின்றனர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள்.