துப்பாக்கித் தோட்டாக்கள் file
தமிழ்நாடு

சென்னை: குப்பைத் தொட்டியில் கிடந்த துப்பாக்கித் தோட்டாக்கள் - விசாரணையில் தெரியவந்த தகவல்!

சென்னை தி.நகர் குப்பைத் தொட்டியில் துப்பாக்கித் தோட்டாக்கள் கிடந்ததால் பரபரப்பு. போலீசார் நடத்திய விசாரணையில் அவை சினிமாவில் பயன்படுத்தப்படும் டம்மி தோட்டாக்கள் என்பது தெரியவந்தது.

ஜெ.அன்பரசன்

சென்னை தியாகராய நகர் முத்துரங்கன் சாலை - வரதராஜன் தெரு சந்திப்பில் குப்பைத்தொட்டியொன்று உள்ளது. இதில் இருந்த குப்பைகளை எடுத்துச் செல்ல ஒப்பந்த தூய்மை பணியாளர் பிராட்வேயைச் சேர்ந்த திருநாவுக்கரசு (36) என்பவர் நேற்று நண்பகல் சென்றுள்ளார். அப்போது அந்த குப்பைத் தொட்டியில் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனடியாக காவல்துறையினரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

Police station

இதையடுத்து தி.நகர் காவல் உதவி ஆணையரிடம் தோட்டாக்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விசாரணை செய்தனர். அப்போது, தியாகராய நகர் பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து தோட்டாக்கள் குப்பை தொட்டியில் போடப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த வீட்டு முகவரிக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (67) என்பவர், சினிமா சண்டை காட்சிகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருவது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கீழே விழுந்துள்ள தோட்டாக்களை, வீட்டில் தூய்மை பணி செய்யும் ரேணுகா என்பவர் குப்பையோடு குப்பையாக குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக மாம்பலம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.