தமிழ்நாடு

சென்னை: பாதாள சாக்கடை பள்ளத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

kaleelrahman

தாம்பரத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் இருவர் சிக்கியதில் ஒருவர் பலி, ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பர்மா காலனியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் 15 அடி ஆழத்திற்கு தோண்டிய பள்ளத்தில் இறங்கி 8 கூலி தொழிலாளர்கள் வேலை செய்தனர்.

அப்போது இரும்பு குழாயை, பொக்லைன் மூலமாக பள்ளத்தின் பக்கவாட்டில் தள்ளியுள்ளனர் அதில் ஏற்பட்ட அதிர்வினால் பக்கவாட்டில் குவித்து வைத்திருந்த மண் பள்ளத்தில் சரிந்தது. இதில் திருவொற்றியூரை சேர்ந்த சேகர் (28), மரக்காணத்தைச் சேர்ந்த பாரதி (21) ஆகிய இருவரும் சிக்கிக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து உடனடியாக தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில், தகவல் அறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து இரண்டு வாகனத்தில் வந்த வீரர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் சேகர் உயிரிழந்தார், பாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த தாம்பரம் போலீசார் ஒபந்ததாரர் வாசுதேவரெட்டி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.