தமிழ்நாடு

சென்னை சிறுமி உயிரிழப்பு: குளிர்பானம் காரணமா?

kaleelrahman

பெசன்ட் நகர் மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்த 13 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சென்னை பெசன்ட் நகர் ஓடை மாநகரில் வசித்து வருபவர்கள் சதீஷ், காயத்ரி தம்பதியினர். இவர்களது இளைய மகள் தரணி (13). இவர் நேற்று மாலை வீட்டின் அருகேயுள்ள மளிகைக் கடையில் குளிர்பானம் மற்றும் ரஸ்னா வாங்கி குடித்துள்ளார்.

இந்நிலையில், குளிர்பானம் குடித்த சில மணித்துளிகளில் வாந்தி எடுத்த சிறுமியின் மூக்கில் இருந்து சிவப்பு நிறத்தில் சளி வந்துள்ளது. பயந்துபோன சிறுமியின் அக்கா உடனடியாக தனது அம்மாவை அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து அம்மா வந்து பார்த்தபோது சிறுமி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடல் முழுவதும் நீல நிறத்தில் மாறியுள்ளது. உடனடியாக சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, குளிர்பானத்தை ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் கையகப்படுத்தியுள்ளனர்.