தமிழ்நாடு

சென்னை: பார்சல் வாகனத்தில் தீ விபத்து... பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

kaleelrahman

புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

சென்னை தாம்பரம் அடுத்த மதுரவாயல் புறவழிச்சாலை அனகாபுத்தூர் அருகே திருப்போரூரில் இருந்து கோயம்பேடு நோக்கி கொரியர் பார்சல்களை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு வாகனத்தில் திடீரென புகை வரத் துவங்கியுள்ளது.


இதை கவனித்த வாகன ஓட்டுநர் சண்முகம் உடனே வாகனத்தை புறவழிச்சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு இறங்கி வந்துவிட்டார். சிறிது நேரத்தில் புகை தீயாக மாறி மளமளவென எரியத் துவங்கியது. இதில் பார்சல் கொண்டு சென்ற பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.


தகவல் அறிந்து தாம்பரம், மதுரவாயல், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.