தமிழ்நாடு

சென்னை: தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த 12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

சென்னையில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்குத் திரும்பிய 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரகாந்தன், கவுரி தம்பதியர். இவர்களது மகள் ஹேமாவதி (17). தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், நேற்று ஹேமாவதி வழக்கம் போல தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்குத் திரும்பிய அவர், வீட்டிற்று அருகில் உள்ள டியூசன் மையத்திற்குச் சென்றுள்ளார்.

இதையடுத்து சிலிண்டர் போடுவதற்காக வீட்டிற்கு வந்த ஊழியர், கதவை தட்டியபோது கதவு திறக்கப்படாததால் அருகில் வசிப்பவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து அருகில் வசிக்கும் உறவினர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி கிடந்துள்ளார்.

இதையடுத்து சடலத்தை கீழே இறக்கிய உறவினர்கள் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து பரிசோதித்தபோது மாணவி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அபிராமபுரம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியின் தற்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.