தமிழ்நாடு

சென்னை: அண்ணா சிலைக்கு அவமதிப்பு – ஓபிஎஸ் கடும் கண்டனம்

சென்னை: அண்ணா சிலைக்கு அவமதிப்பு – ஓபிஎஸ் கடும் கண்டனம்

webteam

அண்ணா சிலையை கலங்கப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழ் இதழியலின் முன்னோடியும், 'தமிழர் தந்தை' என்று எல்லோராலும் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது திருவுருவப் படத்திற்கு மலர்களை தூவியும் முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது... நாம் தமிழர்கள் என்று அனைத்து தமிழர்களையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்தவர் சி.பா.ஆதித்தனார் என்பதை உலகம் நன்கு அறியும். அவரது புகழை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பறைசாற்றுக் கொண்டிருப்பார்கள்; நாமெல்லாம் தமிழர்கள் என்று புகழாரம் சூட்டினார்.

பத்திரிகை படிக்க வேண்டிய ஆர்வத்தை ஆதித்தனார் உருவாக்கினார் என்பதுதான் வரலாறு. தமிழகத்திற்கு அவர் ஆற்றிய பணிகளும் கடமைகளும் உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழரும் அவரது புகழை பறைசாற்ற வேண்டும் என்றவரிடம் அண்ணா சிலைக்கு அவமதிப்பு நடந்ததை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியார்கள் கேட்டதற்கு... தமிழகத்தை பொறுத்தவரையில் தலைவர்கள் ஆற்றிய நற்பணிகளுக்கு புகழ் சேர்க்கும் விதமாக திருவுருவச் சிலை வைக்கப்படுவது பண்பாடாக இருந்து வருகிறது, அதன்படி அண்ணா சிலை உள்ளது. சில விஷமிகள் அதை கலங்கப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் கூறினார்.