தமிழ்நாடு

ரேஷன் அரிசி விநியோகத்தில் மாற்றம்

ரேஷன் அரிசி விநியோகத்தில் மாற்றம்

rajakannan

ரேஷனில் விநியோகம் செய்யப்படும் பச்சரிசி, புழுங்கலரிசி விநியோகத்தில் மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் ரேசன் கடைகளில் இலவசமாக பச்சரிசி, புழுங்கலரிசி விநியோகிக்கப்படுகிறது. அதேபோல், சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணை ஆகிய பொருட்கள் கட்டுப்பாட்டு பொருட்கள் என்ற பெயரில் மானிய விலையில் வழங்கப்பட்டுவருகின்றன.

இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 10 கிலோவும் புழுங்கலரிசி 10 கிலோவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கார்டுக்கு 70 சதவீதம் புழுங்கல் அரிசியும், 30 சதவீதம் பச்சரிசியும் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிடங்கு பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இந்திய உணவு கழகத்தில் இருந்து 70:30 என்ற விகிதத்தில் ரேஷன் அரிசி பெறப்படுகிறது. அதே விகிதத்தில் பச்சரிசி, புழுங்கல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கிடங்கு பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 14 கிலோ புழுங்கல் அரிசியும், 6 கிலோ பச்சரியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.