தமிழ்நாடு

சென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு

webteam

சென்னை கோயம்பேட்டில் நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

சென்னை கோயம்பேடு பகுதிகளில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்குகளில் இருந்து பெட்ரோல் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் கோயம்பேடு ஔவை திருநகர் 5- வது தெரு பகுதியில் ஒரு வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று பெட்ரோல் திருடிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளன. பெட்ரோலை திருடி பைக்கில் செல்லும் இளைஞர் யார் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த திருட்டு சம்பவத்தில் 2 பேர் ஈடுபட்டுள்ளதும் அந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து பெட்ரோல் திருடப்படுவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இது தொடர்பாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் போலீசார் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.