தமிழ்நாடு

பீலா ராஜேஷ் குறித்து அவதூறு: வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார்

webteam

சுகாதாரத்துறை செயலாளர் குறித்து அவதூறு பரப்பியதாக அடையாளம் தெரியாத நபர் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசில் சுகாதாரத் துறை இயக்குநர் ஒரு புகார் ஒன்றை அளித்தார். அதில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தகவல்களை மாற்றி கூறியதாக சமூக வலைதளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவதூறு பரப்புவதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட முதல் நபர் பிப்ரவரி மாதமே கண்டறியப்பட்டதாகவும், ஆனால் மார்ச் மாதம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மாற்றி கூறியதாக மர்ம நபர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த அவதூறை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ட்விட்டர் தளத்தில் அவதூறாக வீடியோ வெளியிட்ட நபர் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யார் என்று தெரியாத காரணத்தினால் முதல் தகவல் அறிக்கையிலும் அடையாளம் தெரியாத நபர் என்றே பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.