தமிழ்நாடு

பள்ளிக்குள் புகுந்து சாதி பெயரைச் சொல்லி மாணவன் மீது தாக்குதல் - இரு பெண்கள் மீது வழக்கு

webteam

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து சாதியைச் சொல்லி திட்டி, மாணவரை தாக்கியதாக 2பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே ஊரைச் சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவியும் பயின்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த சிறுவன் வகுப்பில் இருந்த மாணவி மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து ஆசிரியர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து நேற்று, அந்த மாணவியின் தாயார், மற்றொரு பெண்ணுடன், பள்ளி வகுப்புறைக்குள் புகுந்து அந்த சிறுவனை செருப்பால் அடித்ததோடு சாதி பற்றி அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில், காயம் அடைந்த மாணவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே இந்த பிரச்னை தொடர்பாக மாணவியின் தாய் மற்றும் அவருடன் வந்த பெண்மணி ஆகியோர் மீது நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ்யிடம் மனு அளித்துள்ளனர்.

வகுப்புறைக்குள் மாணவர் மீது தாக்குதல் நடத்திய போது ஆசிரியர்கள் தடுக்கவில்லை என்றும், வெளியே சென்று அடிக்கச் சென்னதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.