தமிழ்நாடு

காரை விற்பதுபோல் விற்று திருடும் கும்பல் - சிசிடிவியில் அம்பலம்

webteam

சென்னையில் ஒரே காரை மூன்று பேரிடம் விற்று பின்னர் அதையும் திருடிய கும்பல் சிசிடிவி காட்சி உதவியால் காவல்துறையினரிடம் பிடிபட்டது.

சென்னை மதுரவாயலில் வசிப்பவர் தணிகை. சினிமா தயாரிப்பாளரான இவர் கடந்த 7ஆம் தேதி பாரதி, கணேசன், சத்தியா மற்றும் ரிச்சர்ட் ஆகியோரிடம் இருந்து இன்னோவா கார் ஒன்றை ரூ.6 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். இதையடுத்து 10ஆம் தேதி வாங்கிய காரை எடுத்துக்கொண்டு கானாத்தூரில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு சென்று தங்கியுள்ளார். அங்கு தூங்கி எழுந்த தணிகை, பின்னர் காரை நிறுத்திய இடத்தில் சென்று பார்த்தபோது, அங்கு காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கானாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், சொகுசு விடுதியின் சிசிடிவி காட்சிகளை பார்த்தனர். அத்துடன் கார் திருடப்பட்ட நேரத்தில் அந்தச் சுற்றுப்புற பகுதியில் செயல்பட்ட செல்போன் நம்பர்களை கண்டறிந்து அதன்மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து காரை திருடிச் சென்ற இரண்டு நபர்களையும் கைது செய்து, காரை மீட்டனர். காரை எடுத்துச்செல்ல தணிகை காவல்நிலையம் வந்தபோது, காரை திருடியவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் தணிகைக்கு காரை விற்ற பாரதி மற்றும் கணேசன்தான் அந்தத் திருடர்கள் என்ற உண்மை புரிந்தது. 

இதையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதே காரை மூன்று பேரிடம் விற்று, இதேபோன்று திருடியது தெரியவந்தது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள ரிச்சர்ட் மற்றும் சத்தியா ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.