தமிழ்நாடு

முறைகேடாக மண் அள்ளுவதாக வந்த புகார் - விசாரிக்க சென்ற தலையாரியை தூக்கிவீசி சென்ற கார்

Sinekadhara

அறந்தாங்கி அருகே ஆளப்பிறந்தான் குடிக்காடு கண்மாயில் அதிகளவில் முறைகேடாக இருப்பாட்டு மண் எடுப்பதாக வந்த புகாரையடுத்து சம்பவ இடத்தை பார்வையிட்டு திரும்பும்போது சாலை ஓரம் நின்று அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்துக்கொண்டிருந்த ஆளப்பிறந்தான் தலையாரி செந்தில், பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆளப்பிறந்தான் குடிக்காடு கண்மாயில் முறைகேடாக இருப்பாட்டு மண் அள்ளுவதாக VAO-விற்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து தலையாரி செந்திலை குடிக்காடு கண்மாய் சென்று பார்வையிட சொன்னதையடுத்து, கண்மாயிக்கு சென்ற செந்தில் இருப்பாட்டு மண் அள்ளியதை விசாரித்து விட்டு திரும்பும்போது சாலை ஓரத்தில் நின்றுகொண்டு VAO-விற்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி நோக்கி அதிவேகமாக வந்த கார் தலையாரி செந்தில் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளார்.

காரை ஓட்டி வந்தவர் போசம்பட்டியை சேர்ந்தவர் என்பதும், விபத்து நடந்தவுடன் காரை ஓட்டியவர் தலைமறைவாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விபத்தில் இறந்த தலையாரி செந்திலுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இறந்த தலையாரியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் விபத்துக்கு காரணமான காரை ஓட்டிய நபரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.