புஸ்ஸி ஆனந்த் புதிய தலைமுறை
தமிழ்நாடு

பொன்னேரி | ‘தளபதி விலையில்லா வீடு’ வழங்கும் விழாவில் காட்டமான தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்!

PT WEB

செய்தியாளர் - எழில்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ‘தளபதி விலையில்லா வீடுகள்’ வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் தற்போது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சிவன் கோயில் தெருவில் பாபு மற்றும் சபீதா ஆகிய 2 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இவர்களுக்கு தலா ரூ 1.70 லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

புஸ்ஸி ஆனந்த்

பொன்னேரி தொகுதி தவெக தலைவர் சிலம்பரசன் ஏற்பாட்டில், அந்த 2 வீடுகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று திறந்து வைத்தார். அத்துடன் வீடுகளுக்கு தேவையான வீட்டு உபயோகச் சாமான்கள், மளிகைச் சாமான்கள் உள்ளிட்டவற்றையும் அவர் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 10 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இன்று மேலும் 2 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு கட்சி நிர்வாகிகள் வீடுகளை வழங்குவார்கள்” என்றார்கள்.

அப்போது கட்சி நிர்வாகிகள் கட்டித் தரும் வீடுகளுக்கு ‘விஜய் ரசிகர் வீடு வழங்கும் திட்டம் என்றுதானே பெயர் வைக்க வேண்டும்?’ என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு புஸ்ஸி ஆனந்த், “இவர்கள் கொடுத்தார்களா, அவர்கள் கொடுத்தார்களா என்பதல்ல விஷயம். தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமே விஷயம். இதற்கு தளபதி பணம் கொடுத்தாரா இல்லையா என்பது உங்களுக்கு தெரியுமா?” என காட்டமாக கூறினார்.