மதுரையில் அரசுப்போக்குவரத்து பணிமனைகளில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கிய இவ்வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் அரசுப்போக்குவரத்து பணிமனைகளில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பணிமனைகளில் இருந்து அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேருந்து இயக்கப்பட்டது.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், இதுவரை 15 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இனி பேருந்து இயக்கப்படுவது மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தற்போது பணிக்கு வந்துள்ள ஊழியர்களின் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறினார்.