தமிழ்நாடு

கல்லூரிப் பேருந்து மோதி 5 மாணவிகள் படுகாயம் 

webteam

பெரம்பலூர் அருகே தனியார் கல்லூரிப் பேருந்து மோதியதில், அரசுப்பள்ளி மாணவிகள் 5 பேர் படுகாயமடைந்தனர்.

பள்ளிக்கு செல்வதற்காக அகல்யா, சரண்யா, காயத்ரி, செந்தாமரை, கோமதி ஆகிய ஐந்து மாணவிகள் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது குன்னத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த தனியார் கல்லூரிப் பேருந்து, மாணவிகள் மீது மோதியது. அதில், அவர்கள் 5 பேரும் படுகாயமடைந்தனர். 

பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து, 9ஆம் வகுப்பு மாணவி காயத்ரி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தனியார் கல்லூரிப் பேருந்து அதிவேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் எனக்கூறி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். 

விபத்து ஏற்படுத்திய பேருந்தை அடித்து உடைத்த மக்கள், அந்த வழியே வந்த சம்பந்தப்பட்ட கல்லூரியின் 10க்கும் அதிகமான பேருந்துகளையும் தாக்கினர். தனியார் கல்லூரிப் பேருந்துகள் சாலையில் ஒன்றையொன்று முந்திச் செல்வதை கட்டுப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததே இந்த விபத்திற்கு காரணம் என மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். அரியலூர் - பெரம்பலூர் சாலையில் நடைபெற்ற மறியலால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.