ஆம்ஸ்ட்ராங் புதிய தலைமுறை
தமிழ்நாடு

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் வெட்டிப் படுகொலை... சென்னையில் பயங்கரம்.. இபிஎஸ் கண்டனம்!

Prakash J

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இன்று இரவு 7.30 மணி அளவில், சென்னை பெரம்பூரில் தன் வீட்டு வாசல் அருகே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கும்பல் அவரை வெட்டிவிட்டு தப்பியது. படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தனிப்படை அமைத்து தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: வெற்றிக் கொண்டாட்டம் முடிந்தபின் இங்கிலாந்துக்குப் பயணம்.. அவசரமாய் புறப்பட்டுச் சென்ற விராட் கோலி!

இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ”ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார்

எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய முதல்வருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ரோகித் மற்றும் விராட் ஜெர்சி நம்பருக்கு ஓய்வா? ராபின் உத்தப்பா எதிர்ப்பு!