தமிழ்நாடு

புத்தக பைகளில் கட்சி தலைவர்களின் படங்கள் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

கலிலுல்லா

பள்ளி மாணவர்களின் புத்தக பைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்கள் அச்சிடப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வழங்கப்பட்ட நோட்டு புத்தகங்கள், புத்தக பைகளை கைவிடும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி 'நமது திராவிட இயக்கம்' என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'அவ்வாறு அச்சிட்ட 64 லட்சம் புத்தக பைகள், 10 லட்சம் எழுதுபொருட்கள் வீணாக்கப்பட மாட்டாது, மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்' என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

மேலும், 'பள்ளி புத்தக பைகளில் படத்தை அச்சிடுவதை முதலமைச்சர் விரும்பவில்லை' என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். தொடர்ந்து, ''இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்'' என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.