தமிழ்நாடு

ப்ளுவேல்-க்கு தமிழகத்தில் முதல் பலி: மதுரை மாணவர் தற்கொலை!

webteam

மதுரை மாவட்டம் திருநகர் அருகே மொட்டைமலையில் ப்ளூவேல் விளையாடியதால் கல்லூரி மாணவர் ‌தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய விளையாட்டான புளூ வேல், தற்போது இந்தியாவிலும் ஊடுருவ தொடங்கியுள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புளூ வேல் விளையாட்டினால் பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், ப்ளூ வேல் கேம் விளையாடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அவரது வலது கையில் திமிங்கலத்தின் படத்தை வரைந்துள்ளார். நோட்டு புத்தகங்களிலும் திமிங்கலத்தின் படத்தை வரைந்து, ’இது விளையாட்டல்ல. விபரீதம். உள்ளே சென்றால், வெளியே வர முடியாது’ என்று எழுதி வைத்திருந்தாராம். இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த விளையாட்டுக்கு தமிழகத்தில் நடந்துள்ள முதல் பலி இது. இந்த விளையாட்டு இன்னும் பரவாமல் தடுக்க, அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.