கண்பார்வையற்றவர் pt desk
தமிழ்நாடு

தென்காசி: கண்பார்வையற்ற நபரை பாதிவழியில் இறக்கிவிட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்

PT WEB

கடையம் அருகே கண் பார்வையற்ற நபரை பாதியிலேயே இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துநர்.

கடையம் அருகே கண் பார்வையற்ற நபர் லக்கேஜ் டிக்கெட் வாங்காததால் பேருந்து நடத்துநர் அந்த நபரை பாதிவழியிலேயே இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பாபநாசம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக இயக்குனர் தசரதனுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி சுப்பையா. இவருக்கு இரண்டு கண்களும் தெரியாது. இந்த நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி, சீனி வாங்கி சென்று உள்ளார்.

அப்போது அந்த பகுதியாக வழியாக பாவூர்சத்திரம் நோக்கி வந்த அரசுப் பேருந்தில் அவர் ஏறி உள்ளார். அப்போது 5 கிலோ அரிசி பை வைத்திருந்ததாக அவரிடம் அரசுப் பேருந்து நடத்துநர் லக்கேஜ் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு கண் தெரியாத கந்தசாமி சுப்பையா வெறும் 5 கிலோ பை தானே வைத்துள்ளேன். இதற்கு எதற்காக லக்கேஜ் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அரசு பேருந்து நடத்துநர், கண்ணு தெரியவில்லை என்றாலும் அரிசி, சீனி வாங்கிவிட்டு வருகிறாய் அல்லவா.. லக்கேஜ் எடுக்க வேண்டும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து லக்கேஜ் எடுக்காத கந்தசாமி சுப்பையாவை, திருமலைபுரம் முதல் முதலியார்பட்டி செல்லும் சாலை பகுதியில் பாதியிலேயே இறக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பார்வையற்ற கந்தசாமி சுப்பையா மிகவும் சிரமபட்டு அப்பகுதியை கடந்து சென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரையும் தற்காலிக பணிகளை நீக்கம் செய்ய வேண்டும் என பாபநாசம் பணிமனையில் இருந்து நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக இயக்குநர் தசரதனுக்கு பரிந்துரை கடிதம் எழுதப்பட்டுள்ளதாக பாபநாசம் பணிமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.