தமிழ்நாடு

“எனக்கு தடை விதிக்க மாநில பொதுச்செயலாளருக்கு அதிகாரமில்லை” - பி.டி.அரசகுமார்

webteam

தன்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என சொல்ல மாநில பொதுச்செயலாளர் நரேந்திரனுக்கு அதிகாரமில்லை என பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று நடந்த திமுக நிர்வாகி திருமண விழாவில் பங்கேற்று பேசிய பி.டி.அரசகுமார், எம்.ஜி.ஆர்-க்கு பின்னர் தான் ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின் தான் என பேசியிருந்தார். அத்துடன் “காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும் தளபதி அரியணை ஏறுவார்” எனவும் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், “அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை அவர் கட்சியின் சார்பில் எவ்வித நிகழ்சிகளிலும், கூட்டங்களிலும், ஊடக விவாதங்களிலும் கலந்து கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தடை குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய பி.டி.அரசகுமார், “ஸ்டாலின் முதல்வர் ஆவார் என நான் பேசியது தொடர்பாக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில பொறுப்பு தலைவர் கேசவ விநாயகத்திடம் நேற்றே விளக்கம் அளித்துவிட்டேன். என்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என சொல்ல மாநில பொதுச் செயலாளருக்கு நரேந்திரனுக்கு அதிகாரமில்லை” என தெரிவித்தார்.