தமிழ்நாடு

பட்டப்பகலில் இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய பெரியப்பா..!!

webteam

கோவையில் பட்டப்பகலில் இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய பெரியப்பாவை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த வடமதுரை வி.எஸ்.கே நகர் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த 21 வயதான இளம்பெண்ணை, ஒரு வயதான நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், அந்த நபரை பிடித்து, துடியலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தாக்குதலில் கத்தியால் கைகளில் இரு இடங்களில் பலத்த காயமடைந்த பெண்ணை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

விசாரணையில், கத்தியால் குத்திய நபர் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கட்டிட வேலை செய்து வரும் துரைராஜ் என்பதும், தாக்குதலுக்குள்ளான இளம்பெண் அவரது மனைவியின் அக்காள் மகள் மாது என்பதும் தெரியவந்தது. மேலும் மாதுவை, துரைராஜ் வளர்த்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தகாத உறவு காரணமாக திருமணம் செய்து கொள்ள மறுத்து, மாது யாரிடமும் சொல்லாமல், கோவைக்கு வந்ததாகவும் துரைராஜ் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, மாது கோவையில் எங்கு தங்கியிருந்தார், யாருடன் இருந்தார், என்ன செய்து வருகிறார், கத்தியால் தாக்கப்பட்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.