தமிழ்நாடு

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது !

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது !

rajakannan

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது. 

இதையடுத்து வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணியளவில் வழங்கப்பட்டது. 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று  நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு அளித்துள்ளார். சபாநாயகர் உத்தரவில் எவ்வித தவறும் இல்லை. சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், “முதல்வருக்கு எதிராக 18 எம்.எல்.ஏ கள் ஆளுநரிம் மனு அளித்தபோது, இதில் என்னால் தலையிட முடியாது என ஆளுநர் கூறியுள்ளார். ஆனால் இந்த தகவலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கள் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கவில்லை” என நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பின் போது தெரிவித்தார்.

நீதிபதி சத்தியநாராயணா அளித்த தீர்ப்பின் விவரம்:-

  • 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும்
  • 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை
  • நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கம்
  • எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் சட்டவிரோதம் இல்லை 

சபாநாயகரின் தகுதி நீக்க நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ள நிலையில், பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 214 ஆக தொடரும். பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 108 ஆக இருக்கும். தற்போது அதிமுகவின் பலம் 109 ஆக இருப்பதால் ஆட்சிக்கு பாதிப்பு இருக்காது.

  இடைத்தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியான பின்னர்தான், இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும்.