Jewel shop robbery pt desk
தமிழ்நாடு

ஆவடி: நகைக் கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி 50 சவரன் நகை கொள்ளை – போலீசார் விசாரணை

ஆவடி அருகே நகைக் கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருவர் கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி 50 சவரனுக்கும் மேலான நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

ஆவடி அடுத்து பொத்தூர் அரிக்கம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (38). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 12 வருடங்களாக திருமுல்லைவாயில் ரயில் நிலையம் செல்லும் பிருந்தாவனம் நகர் பகுதியில் ஜோதி ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று இரவு கடையில் தனியாக இருந்த போது, மர்ம நபர்கள் இருவர், அவரை மிரட்டி கயிற்றால் கட்டிப்போட்டுள்ளனர். மேலும் கத்தியால் அவரின் கையில் குத்தி விட்டு, சுமார் 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

Po9lice investigate

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, உடனடியாக அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை துவங்கினர்.

ஆவடி காவல் உதவி ஆணையர் அன்பழகன் தலைமையில் தனி படைகள் அமைத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் பேருந்து நிலையம் என பல்வேறு பகுதியில் போலீசார் பிரிந்து சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

நகைக் கடையில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் நாடகமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ள நிலையில், அந்த கோணத்திலும் திருமுல்லைவாயல் காவல் நிலைய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடை உரிமையாளர் ரமேஷ், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.