Protest pt desk
தமிழ்நாடு

மயிலாடுதுறை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சித்ததில் தள்ளுமுள்ளு!

webteam

செய்தியாளர் - மா.ராஜாராம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் கம்பரின் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் உள்ளது. இங்கு தஞ்சாவூர் கோட்ட ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் "அயோத்தி ராமனும், தமிழ் கம்பனும்" என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ் மண் தன்னுரிமை இயக்கத்தினர் கருப்புக் கோடி காண்பித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

Protest

இந்நிலையில் சேத்திரபாலபுரம் மெயின் ரோட்டில் ஆளுநர் கார் வரும் போது, கருப்புக் கொடி காண்பிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் வந்த போராட்டக்காரர்களை ஆளுநர் செல்லும் பாதையில் இருந்து 100 மீட்டர் முன்பாக மூன்றடுக்கு பேரிகார்டு வைத்து 520க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சேத்திரபாலபுரம் பகுதியில் சரியாக 12 மணி அளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி காரில் சென்ற நிலையில் போராட்டக்காரர்கள் 100 மீட்டருக்கு அப்பால் இருந்து கருப்புக்கொடி காண்பித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி கோஷமிட்டனர்.

அப்போது போலீசார் அவர்களை குண்டுக் கட்டாக வேனில் ஏற்றினர். இந்நிலையில், ஒன்றிய செயலாளர் விஜயகாந்த், ஆளுநர் காரை நோக்கி வேகமாக ஓடினார். போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். போலீசார் போராட்டக்காரர்களை வேனில் ஏற்றிய போது அவர்கள் திமிறியதால் வேன் படிக்கட்டு மேல்பாகம் பிடிமானம் சேதமடைந்தது.

ஆளுநர் ரவி

மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், மக்கள் விரோதப் போக்கு நடவடிக்கையை கண்டித்தும் கருப்புக் கொடி காண்பிப்பதாக கூறிய அவர்கள், ஆளுநரை திரும்பிப் போகச் சொல்லி வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை கைது செய்து மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.