Treatment pt desk
தமிழ்நாடு

செங்கல்பட்டு: கோயில் கட்ட பணம் கொடுக்கமறுத்த சகோதரர்கள் மீது கொடூரத் தாக்குதல்? போலீசார் விசாரணை

webteam

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஜாகிர் உசேன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அகமது பாஷா (33). இவரது அண்ணன் பாரூக் (37). இருவரும் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள கொத்திமங்கலம் என்ற பகுதியில் பழைய இரும்பு கடை மற்றும் உணவகம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலையில் அங்கு வந்த இளைஞர்கள் சிலர், கோயில் கட்ட உள்ளதாகவும், அதற்கு நிதி கொடுக்குமாறும் கேட்டதாகக் கூறப்படுகிறது.

Police station

அதை அவர்கள் மறுத்தநிலையில், அந்த கும்பல், அகமது பாஷா மற்றும் பாரூக் ஆகிய இருவருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுச் சென்றதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து நேற்றிரவு திருக்கழுக்குன்றம் மசூதி தெரு பகுதியில் அகமது பாஷா, பாரூக் மற்றும் அவரது நண்பர் இப்ராஹிம் ஆகியோர் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், மூவரையும் தாக்க முயற்சி செய்துள்ளது. அப்போது பாரூக் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து அஹமத் பாஷா மற்றும் இப்ராஹிம் ஆகிய இருவரையும் பயங்கர ஆயுதங்களால் அந்த மர்ம கும்பல் வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள், அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் உள்ள இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருக்கழுக்குன்றம் போலீசார். முன்பகை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.