தஞ்சாவூர்  முகநூல்
தமிழ்நாடு

தஞ்சாவூர் | பட்டப்பகலில் அரிவாள் வெட்டு... பெட்ரோல் பங்கில் சட்டக் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்!

பட்டப்பகலில் முதுகில் அரிவாளால் வெட்டப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்.

PT WEB

செய்தியாளர்: ந.காதர் உசேன்

தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இதில், இன்று காலை பால சுப்பிரமணியம் என்பவர் பெட்ரோல் போடுவதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் பெண் ஊழியருக்கும், பாலசுப்ரமணியனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய் தகராறு அதிகரிக்கவே, அந்தப் பெண் ஊழியர் தனது கணவரை தொலைபேசி மூலம் வரவழைத்துள்ளார். இதேபோல, பாலசுப்பிரமணியம் தனது மகனும் சட்ட கல்லூரி மாணவருமான ஹரிஹரனை அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த இரு தரப்பும் பேசிக் கொண்டிருக்கும் போது, ஹரிஹரன் அந்தப் பெண் ஊழியரின் கணவரை தாக்கியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து சரமாரியாக ஹரிஹரனை வெட்டியுள்ளார். இதனை பார்த்து அங்கு நின்றவர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். இதில் ஹரிஹரனுக்கு முதுகில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனையடுத்து, அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பட்டப் பகலில் இளைஞரை ஒருவர் அறிவாளால் வெட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.