ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் கோப்பு படம்
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. அஸ்வத்தாமன் சிக்கியது எப்படி? அதிர்ச்சியூட்டும் பின்னணி...!

ஜெ.அன்பரசன்

22ஆவது நபராக அஸ்வத்தாமன் கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் 22 ஆவது நபராக கைது செய்யப்பட்டிருப்பது, அஸ்வத்தாமன். வழக்கறிஞரான இவர், குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல தாதா நாகேந்திரனின் மகன். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில முதன்மைப் பொதுச் செயலாளர். இவரது கைகளில் விலங்கு மாட்டப்பட்டதும், கட்சிப் பதவியையும் அடிப்படை உறுப்பினர் தகுதியையும் பறித்தது, காங்கிரஸ் கட்சி.

ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் 'போலீஸ் கஸ்டடி'யில் உள்ள பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோர்தான், அஸ்வத்தாமனின் பெயரை கூறியுள்ளனர். அஸ்வத்தாமனை வரவழைத்து ஒரு நாள் முழுவதும் விசாரித்ததில், அவர் மட்டுமல்ல, அவரது தந்தையும் ஆயுள் தண்டனை கைதியுமான தாதா நாகேந்திரனும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

155 ஏக்கர் நிலம் - ஏக்கருக்கு 2 கோடி பேரம்

திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் - ஒரக்காடு ஊராட்சியில் பிரபல சோப் கம்பெனிக்கு சொந்தமான 155 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வந்துள்ளது. இதை வாங்குவதில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சி.டி.சேகர் மற்றும் அவரது நண்பர் மனீஷ் தரப்புக்கும், அஸ்வத்தாமனுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன்

நில பரிவர்த்தனையில், ஒரு ஏக்கருக்கு 2 கோடி ரூபாய் வீதம் தனக்கு தர வேண்டுமென மிரட்டியுள்ளார் அஸ்வத்தாமன்... இந்த விவகாரத்தில் சி. டி.சேகரும் மனீசும் ஆம்ஸ்ட்ராங்கிடம் உதவி கேட்டதால், அவர் அஸ்வத்தாமனிடம் பேசியுள்ளார். அப்போது, ஒதுங்கிக் கொள்வதாகக் கூறிய அஸ்வத்தாமன், அதன் பிறகு மனீஷை மிரட்டியுள்ளார். இதனால் மீண்டும் தலையிட்ட ஆம்ஸ்ட்ராங், மனீஷ் - சேகர் தரப்பில் ஆவணங்கள் சரியாக இருப்பதால், மிரட்டல் குறித்து அவர்கள் போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் அஸ்வத்தாமனை ஆம்ஸ்ட்ராங் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதையெல்லாம், சிறையில் உள்ள தாதா தந்தை நாகேந்திரனிடம் கூறியுள்ளார் அஸ்வத்தாமன். சிறையில் இருந்தபடியே, மனீஷூக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் நாகேந்திரன். மிரட்டல் பற்றி அப்போதே போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஆதாரங்களால் கைது செய்த காவல்துறை

இது ஒருபுறம் இருக்க, மீஞ்சூரில் ஜெயப்பிரகாஷ் என்ற தொழிலதிபரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் அஸ்வத்தாமனை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. இதற்கு ஆம்ஸ்ட்ராங் தான் காரணமென நினைத்துள்ளார் அஸ்வத்தாமன். ஆனால், அஸ்வத்தாமனை ஆம்ஸ்ட்ராங் ஜாமீனில் வெளியே எடுத்து, கைதுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. இதன் பிறகு மீண்டும், சோழவரம் நில விவகாரம் பற்றி பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அப்போது சமாதானமாக செல்வதாகக் கூறி, பெரும் தொகை கைமாறியதாகவும் கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமனின் தந்தை தாதா நாகேந்திரன், 4 மாதங்களுக்கு முன்பு பரோலில் வெளியே வந்தபோது, பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்டோர், அவரை நேரில் சந்தித்து, உதவி கோரியுள்ளனர். அருள் மட்டுமே, 3 முறைக்கு மேல் அஸ்வத்தாமனை நேரில் சந்தித்து பண உதவி கேட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையை, ரவுடி சம்போ செந்தில் மூலம் ஒருங்கிணைத்து, பண உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்களை கொண்டு தான், அஸ்வத்தாமனை கைது செய்ததாக காவல்துறை கூறுகிறது. சோழவரம் நில விவகாரம் பற்றி, மனீஷிடமும் விசாரித்து, மிரட்டல் ஆடியோ, சி.எஸ்.ஆர். காப்பி உள்ளிட்டவற்றையும் சேகரித்துள்ளது போலீஸ்..

தீவிரமடையும் விசாரணை

இதுமட்டுமின்றி, சென்னை புறநகர் பகுதிகளில், நாளொன்றுக்கு பல நூறு கோடிகள் புழங்கும் பழைய கழிவுப் பொருள்கள் பிஸினசிலும் அஸ்வத்தாமன் - ஆம்ஸ்ட்ராங் இடையே பகை வளர்ந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங்

தன் மீது சந்தேகம் வரக்கூடாது என கருதிய அஸ்வத்தாமன், கடந்த மார்ச் மாதம் ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வேளையில் வெளிநாட்டில் இருந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் 16 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியை அஸ்வத்தாமன் முன் நின்று நடத்தியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய, சிறையிலிருந்தபடியே நாகேந்திரன் திட்டம் தீட்டிக் கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அவரையும் விசாரிக்க தனிப்படை திட்டமிட்டுள்ளது.