தனியார் கல்லூரி கூகுள்
தமிழ்நாடு

சென்னை | கல்லூரி மாணவர் மீது சரமாரி தாக்குதல்... ஐந்து மாணவர்கள் கைது!

ஜெ.அன்பரசன்

அரும்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில், B.COM மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஓட்டேரியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் நேற்று முன்தினம் இரவு அவரது நண்பர் ஆகாஷ் என்பவரை வீட்டில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வழியில் ஸ்டெர்லிங் சாலையில் வைத்து திடீரென பிரசாந்த் மீது 10-க்கும் மேற்பட்ட நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும், அவரது இருசக்கர வாகனத்தையும் அடித்து உடைத்துள்ளனர். தலை, கழுத்து, முதுகு பகுதியில் காயம் அடைந்த பிரசாந்த் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு சென்றார்.

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார், விசாரணையை தொடங்கினர். அதில் பிரசாந்த் மீது தாக்குதல் நடத்தியதாக பிரசாந்த் படித்த அதே கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படிக்கும் அஸ்வின், ஷாம் சச்சின், ராகவ் வெங்கடேஸ்வர பிரசாத் மற்றும் ராமாபுரத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்களான கிஷோர், தினேஷ் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.

ஐந்து மாணவர்கள் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளான பிரசாந்த், அவருடன் படித்து வரும் தினேஷ் என்ற மாணவரை கல்லூரியில் வைத்து முறைத்ததால் அவர் செல்லும் சாலையில் அவரை பின்தொடர்ந்து வந்து சக மாணவர்கள் தாக்கியது தெரியவந்தது.