தமிழ்நாடு

உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம்..! புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை

webteam

ஆரணி அருகே மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின்பேரில் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கொங்கராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் மாணிக்கவேல். இவரது இளைய மகன் சதீஷ்குமார். இவர் நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து பெங்களூருக்கு குடிபெயர்ந்து விட்டார்.

பெங்களூர் ஏர்போர்ட்டில் செக்யூரிட்டியாக பணி செய்து வந்த சதீஷ்குமார் கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி மாரடைப்பால் இறந்து விட்டதாக அவரது மனைவி நித்யா தனது மாமனார் மாணிக்கவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மறுநாள் சதீஷ்குமார் சடலத்தை பெங்களூரிலிருந்து சொந்த கிரமாத்துக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

அப்போது, சதீஷ் குமாரின் உடலில் காயம் இருப்பதைக்கண்ட தந்தை மாணிக்கவேல் ஜனவரி 22-ஆம் தேதி பெங்களூரில் உள்ள விஜயபுரா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மகன் சதீஷ்குமார் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சுடுகாட்டில் அடக்கம் செய்த சதீஷ்குமார் சடலத்தை தோண்டி வெளியில் எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மருத்துவர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆரணி வட்டாட்சியர் தியாகராஜன் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்தனர்.

சதீஷ்குமார் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரது மனைவி நித்யாவின் பேச்சில் முரண்பாடு உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கொலையா, இல்லையா என்பது தெரியவரும் எனவும் சதீஷ்குமாரின் சகோதரர் சரவணண் தெரிவித்தார்.