தமிழ்நாடு

அரியலூர்: வீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை பத்திரமாக மீட்ட போலீசார்!

kaleelrahman

அரியலூரில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை பத்திரமாக மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கும்பகோணத்திற்கு சென்று அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் திரிந்து கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவனை சந்தேகத்தின் பேரில் கும்பகோணம் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த சிறுவனின் ஊர் அரியலூர் என்றும், தனது தந்தை பெயர் ராமலிங்கம் என்றும், தாய் பெயர் வசந்தா என்றும் பொய்யான தகவலை போலீசாரிடம் கூறியுள்ளான்.

இதை நம்பிய போலீசார் அச்சிறுவனை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி பேருந்து நடத்துநரிடம் கூறி ஜெயங்கொண்டத்திற்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவனை மீட்டு விசாரிக்கும் போது அதே முகவரியை கூறியுள்ளான்.

இதனை நம்பிய ஜெயங்கொண்டம் போலீசார் சிறுவனை அரியலூர் போலீசார் மூலமாக அரியலூருக்கு அனுப்பி வைத்து முகவரியை தேடியுள்ளனர். ஆனால் தவறான முகவரியை மாறிமாறி கூறியதால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறுவனிடம் மீண்டும் விசாரித்தபோது அவன் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் என்று கூறியுள்ளான்.

பின்னர் சிறுவனின் புகைப்படத்தை அனுப்பி விசாரித்ததில் அவன் அரியலூர் மாவட்டம் கூவத்தூர் கிராமம் மடத்து தெருவைச் சேர்ந்த சுரேஷ், சத்யா தம்பதியரின் மகன் கோகுல் (11) என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை அரியலூரில் இருந்து போலீசார் மூலம் மீண்டும் ஜெயங்கொண்டம் அழைத்து வந்து சிறுவனின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  சிறுவனை மீட்ட காவல்துறையினருக்கு பொது மக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்