உயிரை மாய்த்துக்கொண்ட கோவிந்தசாமி pt web
தமிழ்நாடு

அரியலூர்|“கடன கேட்டு டார்ச்சர் செய்றாங்க..”-வீடியோ வெளியிட்டு விபரீத முடிவு எடுத்த தேமுதிக நிர்வாகி!

PT WEB

வட்டி மேல் வட்டி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. தேமுதிக நிர்வாகியான இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் 2 தனியார் நிதி நிறுவனங்களில் 2019 ஆண்டு கோவிந்தசாமி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

அந்நிறுவனத்தில் வாங்கிய கடனை முறையாக தொடர்ந்து கோவிந்தசாமி கட்டி வந்துள்ளார். இதற்கிடையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அவரால் வாங்கிய கடனை சரிவர கட்ட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நிதிநிறுவனம் ஒன்று வட்டி மேல் வட்டி போட்டு கூடுதல் பணத்தை கட்டுமாறு கோவிந்தசாமியிடம் தெரிவித்து வந்துள்ளது. தனியார் நிதி நிறுவன ஊழியர்களும் கோவிந்தசாமியின் வீட்டிற்கே வந்தும், தொலைபேசியிலும் தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளனர்.

இதனிடையே கோவிந்தசாமி உடல் நலம் பாதிக்கப்பட்டு சரிவர வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதாக உறுதிமொழி அளித்த நிலையில்கூட நிதிநிறுவன ஊழியர்கள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்டி, கடனை கட்டவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வீடியோ வெளியிட்ட நிர்வாகி

இதில் மன உளைச்சலுக்கு ஆளான கோவிந்தசாமி, இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு புகார் அளித்துள்ளார். ஆனால் போலிசார் இருதரப்பையும் அழைத்து சமாதானம் செய்துள்ளனர்.

இதனை அடுத்தும் நிதி நிறுவன ஊழியர்கள், நேரில் சென்று அழுத்தம் கொடுத்தால் கோவிந்தசாமி கடந்த சில நாட்களாகவே வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில், அக்டோபர் 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கோவிந்தசாமி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில் அவரைக் காப்பாற்றி, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்கு முன்பாக கோவிந்தசாமி, தனியார் நிதி நிறுவன ஊழியர் செய்யும் டார்ச்சரை வெளிப்படுத்தி தாம் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், தன் குடும்பத்தை காப்பாற்றுங்கள் என்றும் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “தனியார் பைனான்ஸில் கொஞ்சம் லோன் வாங்கி இருந்தேன். மற்றொன்றில் அம்மா பேரில் கொஞ்சம் லோன் வாங்கி இருந்தோம். கொரோனா காலத்தில் பணம் கட்டமுடியவில்லை. இப்போது கொடுக்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள். அனைத்திற்கு ஆதாரங்களை வைத்துள்ளேன்.

மூளையில் ரத்தக்கட்டி

எனக்கு ஏற்கனவே மூளையில் கட்டி உள்ளது. வண்டியில் இருந்து ஒருமுறை விழுந்ததில் மூளையில் ரத்தக்கட்டி உள்ளது. நான் புத்தி சுவாதீனமற்று சுத்தினால் குடும்பத்திற்குத்தான் அசிங்கம் என நினைத்து நான் விஷம் அருந்திவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கோவிந்தசாமி மனைவி பூங்கொடி கொடுத்த புகாரை அடுத்து விக்கிரமங்கலம் போலீசார் தனியார் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தனியார் நிதிநிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

கோவிந்தசாமி கடன் பெற்றது வேறு ஒரு நிறுவனம் என்றும், அவர் தெரிவித்தது வேறு ஒரு நிறுவனத்தின் பெயர் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.