வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்கள் pt web
தமிழ்நாடு

சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்.. பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு!

Rishan Vengai

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 1500க்கும் அதிகமான நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள், ஊதிய உயர்வு, போனஸ், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாம்சங்

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் தொடங்கி ஒரு மாதமாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் முடிவு எட்டப்படாமல் தொடர்ந்துகொண்டே இருந்தது.

இதற்கிடையில் ஊழியர்களுக்கு எதிரான சாம்சங் நிறுவனத்தின் நடவடிக்கை, காவல்துறையின் கைது நடவடிக்கை என இச்சம்பவம் மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்தது.

இந்நிலையில்,, தொழிலாளர்கள் மற்றும் சாம்சங் நிறுவனம் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் டி.ஆர்.பி ராஜா, தா.மோ. அன்பரசன், சி.வி. கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்திருந்தார்.

சமூக முடிவை எட்ட அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், தற்போது சாம்சங் நிறுவனம் மற்றும் சிஐடியு தொழிற்சங்கம் இடையே அமைச்சர்கள் நடத்திய இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்..

ஒரு மாதமாக நீடித்து வந்த வேலை நிறுத்த போராட்டம் சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் உடனான 4 சுமூக உடன்பாட்டுடன் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் தொலிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், “சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 அன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள். இதன்படி மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், மாண்புமிகு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், மாண்புமிகு தொழிலாளர் நலன்-திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் ஆகியோரின் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சு வார்தைகளை நடத்தினார்கள்.

இப்பேச்சு வார்த்தையின் பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது.

சாம்சங் ஊழியர்களின் போராட்டம்

இதன் தொடர்ச்சியாக 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத்தரப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தப் பேச்சு வார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.

2. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

3. வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.

4. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு, வேலை நிறுத்தத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர்.

இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளார்கள்” என்று வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.