சீன நாட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் ptdesk
தமிழ்நாடு

சீன நாட்டுப் பெண்ணை காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்த ஆண்டிப்பட்டி மாப்பிள்ளை

webteam

செய்தியாளர்: மலைச்சாமி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி அமுதன். இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஐ.டி நிறுவனத்தில் வேலை கிடைத்த நிலையில், தனது மனைவி சரவண குமாரியுடன் அமெரிக்கா சென்றார். இதையடுத்து அமெரிக்கா குடியுரிமை பெற்ற அவர், அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறினார்.

சீன நாட்டுப் பெண்ணை காதலித்து திருமணம்

அவர்களுக்கு தருண்ராஜ், கிரண்ராஜ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான தருண்ராஜ் பொறியியல் பட்டப்படிப்பை அமெரிக்காவில் முடித்து, அமெரிக்க ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தருண்ராஜ், தான் பணிபுரியும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த சீன நாட்டை பூர்வீகமாகக் கொண்டவரும், அமெரிக்க கிரீன் கார்டு பெற்று வசித்து வரும் பீட்டர்ஜூ , பிங்வூ தம்பதியினரின் மகளுமான சுனோ ஜூ என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்

இதையறிந்த குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து கலந்து பேசி இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதையடுத்து இவர்களது திருமணம் இந்து முறைப்படி மணமகனின் சொந்த ஊரான தேனி மாவட்டம் அமச்சியாபுரம் கிராமம் அருகே உள்ள கானாவிலக்கு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் மணமகன் தருண்ராஜ், மணமகள் சுனோ ஜூ கழுத்தில் தாலி கட்டினார்.

காதலித்து இந்து முறைப்படி திருமணம்

அப்போது திருமணத்திற்கு வந்திருந்த மணமகனின் உறவினர்கள் மற்றும் சீன நாட்டில் இருந்து வந்திருந்த மணமகளின் குடும்பத்தினர் பூக்களை தூவி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.