அன்புமணி ராமதாஸ் PT
தமிழ்நாடு

"சிபிசிஐடி விசாரணையில் உண்மை வெளிவராது.. சி.பி.ஐ விசாரணை அவசியம்!" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

PT WEB

கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை அருந்தியதாக 150-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி கள்ளக்குறிச்சியில் 27 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், சேலத்தில் 15 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்தது.

கள்ளச்சாராயம் மரணம்

இந்நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார் பா.ம.க மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ்.

தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவமானம் இந்த சம்பவம்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசுக்கு மிகப் பெரிய அவமானம் இந்த சம்பவம். கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் உயிரிழப்பு நடந்தது. இந்த மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது புதிததல்ல. இந்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் பலருக்கு தெரிந்தும் அரசியல் நெருக்கடி இருந்து இருக்கிறது. அரசியல் ரீதியான ஆதரவு இல்லாமல் விற்பனை செய்ய முடியாது” என குற்றம்சாட்டினார்.

அன்புமணி ராமதாஸ்

மேலும், “CBCID விசாரணை வெறும் கண்துடைப்பு மட்டும் தான்; முதலமைச்சர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துச்சாமி இந்த விவகாரத்தில் பொறுப்பேற்று ராஜினமா செய்ய வேண்டும். அதேபோல் இந்த மாவட்டத்தில் இருக்கும் சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் ஆதரவில் தான் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறது என குற்றம்சாட்டிய அவர், ஒரு மருத்துவராக இந்த சம்பவத்தை பார்த்தால் இன்னும் 20 உயிர் போகும் என்ற கவலையான நிலை இருக்கிறது என்று வேதனை தெரிவித்தார்.

சிபிஐ விசாரணை வேண்டும்..

தொடர்ந்து பேசிய அவர், “மதுவை அறிமுகப்படுத்தியது திமுக தான், அதன்மூலம் 45ஆயிரம் கோடி டாஸ்மாக் வருவாய் கிடைக்கிறது. தொடர்ந்து இலக்கை அதிகமாக்கும் வகையில் டாஸ்மாக் விற்பனை நடந்துவருகிறது. டாஸ்மாக் விற்பனையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் தான் முதன்மையாக இருக்கிறது, இந்த விவகாரத்தில், FIR-ல் தவறான தகவலை சேர்த்து இருக்கின்றனர், இதனால் தான் இதற்கெல்லாம் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார், இதற்கும் மேல் திருவண்ணாமலை மாவட்டம் அதிக கஞ்சா விற்கும் இடமாக இருக்கிறது” என குற்றஞ்சாட்டினார்.

கள்ளச்சாராயம் மரணம்

மேலும் மெத்தனால் குறித்து பேசிய அவர், “மெத்தனால் கலந்தால் விஷமாக மாறும், 10 மணி நேரத்திற்குள் ஆண்டி டோட் மருந்து அவசியம் கொடுக்க வேண்டும். ஆனால் அது இல்லாமல் இருக்கிறது. மெத்தனால் கலந்து இருந்தால் ஒரு வாரம் பிறகு கூட பாதிப்பு இருக்கும். ஆண்டி டோஸ் இல்லாததால் எத்தனால் கொடுத்து மருத்துவ நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்திற்கு உடந்தையாக இருக்கின்றனர். இதற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும். தேவைப்பட்டால் பா.ம.க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும். அதுமட்டுமில்லாமல் பாமக இரண்டு நாட்களில் போராட்டத்தை அறிவிக்க இருப்பதாக” அவர் தெரிவித்தார்.