தமிழ்நாடு

“கமலாத்தாள் பாட்டிக்கு உதவ தயார்” - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு

Rasus

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் ‌கமலாத்தாள் பாட்டியின் தொழிலுக்கு உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் ஆலாந்துறை - வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 85 வயது பாட்டி கமலாத்தாள். தள்ளாடும் வயதிலும் உரலில் மாவாட்டி இட்லி சுட்டு விற்று வருகிறார். கமலாத்தாள் பாட்டியின் கடையில், ஒரு இட்லியின் விலை ஒரு ரூபாய்தான். ஒருபோதும் இட்லியின் விலையை உயர்த்தப் போவதில்லை என்று கூறி நெகிழ வைத்தவர் இந்தப் பாட்டி.

இட்லி மாவை கிரைண்டரில்‌ அரைப்பது, கல் உரலில் சட்னி வகைகளை அரைப்பது என பம்ரபரமாக சுழன்று வருகிறார் கமலா பாட்டி. சொந்த கை பக்குவத்தால் தயாரித்த மசாலாவைக் கொண்டு கமலா பாட்டி சமைக்கும் சாம்பாருக்கு வாடிக்கையாளர்கள் ஏராளம். அத்துடன் விறகு அடுப்பில்தான் இன்னும் சமைத்து வருகிறார். கமலாத்தாளின் ஒரு ரூபாய் இட்லி குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி, பெரும் பாராட்டுக்களைப் பெற்றன

இந்நிலையில் கமலாத்தாள் பாட்டிக்கு மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கமலாத்தாள் பாட்டி இன்னும் விறகு அடிப்பில் வேலை செய்வதை கவனிக்கிறேன். யாராவது அவர் குறித்து தெரிந்தால் தெரியப்படுத்தவும். அவரின் தொழிலுக்கு தேவையான உதவிகள் செய்யத் தயாராக இருக்கிறேன். அத்துடன் அவருக்கு எல்பிஜி ஸ்டவ் வாங்கித் தரவும் தயாராக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கமலாத்தாள் பாட்டியை முகாம் அலுவலகத்துக்கு வரவழைத்து பரிசளித்து பாராட்டினார். ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறும் பாட்டியிடம் ஆட்சியர் பரிவோடு கூறினார்.