திருப்பத்தூர்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

திருப்பத்தூர் | மருந்தகத்தின் வாசலில் மயங்கி விழுந்து உயிரிழந்த முதியவர்.. நடந்தது என்ன?

PT WEB

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மலை கிராமத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தே மருத்துவமனைக்குச் சென்ற முதியவர், மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நெக்னா மலை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர், உடல்நலம் சரியாத காரணத்தால் ஆலங்காயத்தில் உள்ள மருத்துவமனைக்கு நடந்து சென்றார். முறையான சாலை வசதி இல்லாத பகுதியில் 7 கிலோ மீட்டர் தூரம் பயணித்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்தகத்தை அடைந்தார்.

அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்த முதியவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அவரது உடல், ஆம்புலன்ஸ் மூலம் கரடுமுரடான மண் சாலை வழியாக நெக்னாமலை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

முதியவரின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள கிராம மக்கள், தங்கள் பகுதிக்கு முறையான சாலை வசதிக்கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர்.