சின்னத்தம்பி  pt desk
தமிழ்நாடு

கணவன் மனைவிக்கு இடையே தகராறு - புத்திமதி சொன்ன விசிக நிர்வாகியை எரித்துக் கொல்ல முயற்சி

webteam

செய்தியாளர்: ஆறுமுகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள எறையூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் சின்னத்தம்பி - பார்வதி தம்பதியர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமான நிலையில் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் சின்னத்தம்பி சிறிது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சின்னத்தம்பியின் மனைவி கணவனைப் பிரிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சின்னத்தம்பி

இதையடுத்து சின்னத்தம்பி குடும்பத்தினர் மீது அக்கறை கொண்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி சூசைநாதன் என்பவர், ‘கணவன் மனைவி ஒன்றாக இருக்கவேண்டும்’ என்று அடிக்கடி இருவருக்கும் புத்திமதி சொல்லியதோடு கண்டித்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஓராண்டாகவே பார்வதி, சின்னத்தம்பியை விட்டு பிரிந்து தனது பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனது மனைவியை கொலை செய்யும் வெறியோடு சுற்றித் திரிந்திருக்கிறார் சின்னத்தம்பி. இதை அறிந்து கடந்த 30 ஆம் தேதி சின்னத்தம்பியை அழைத்த சூசைநாதன், “ஏன் இப்படி பைத்தியம் போல் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறாய்? இப்படியெல்லாம் இருந்தால் எப்படி ஒரு பெண் உன்னுடன் இருப்பாள்? இனியாவது திருந்து” என அறிவுரை சொல்லியுள்ளார். அப்போது சின்னத்தம்பி “அவளை கொல்லாமல் விடமாட்டேன்” என கூறியுள்ளார். இதனால் சின்னத்தம்பியின் கன்னத்தில் அறைந்த சூசைநாதன், “மனைவியிடம் சமாதனம் பேசி அழைத்து வந்து ஒழுங்கா குடும்பம் நடத்து” எனக் கூறி விட்டு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சின்னத்தம்பி, நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி சூசைநாதன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த சூசைநாதன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சூசைநாதன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில், சூசைநாதன் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.