தமிழ்நாடு

உணவில் புழு இருந்ததாக புகார்.. முருகன் இட்லி கடையின் உரிமம் தற்காலிக ரத்து..!

Rasus

அம்பத்தூரில் இயங்கி வரும் முருகன் இட்லி கடையின் உரிமத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் முருகன் இட்லி கடை அப்பகுதியில் பிரபலமானது. இந்தக் கடையின் உணவில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் உணவு பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளித்தார். அதன்பேரில் அந்த ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முருகன் இட்லி கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

முருகன் இட்லி கடையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தயார் செய்யப்பட்ட உணவுகள், சமைப்பதற்கு முன் இருக்கும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சோதனை செய்திருக்கின்றனர். ஆனால் அதில் சரியான சுத்தம் கடைபிடிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அத்துடன் பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற முருகன் இட்லி கடை தவறியுள்ளது.

இதுமட்டுமில்லாமல், உணவு தயாரிப்பவர்கள் தகுந்த மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. இட்லி கடைக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ள போதிலும் அது அதற்கான இடத்தில் வைக்கப்படவில்லை. இப்படி பல்வேறு காரணங்களால் முருகன் இட்லி கடையின் உரிமத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.