Madurai central jail pt desk
தமிழ்நாடு

மதுரை மத்திய சிறையில் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய 15 சிறைவாசிகளும் தேர்ச்சி – அதிகாரிகள் பாராட்டு

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை மத்திய சிறையில் 1400-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறைவாசிகள் தாங்கள் படிக்க விரும்பும் படிப்புகளை தொடர்வதற்காக சிறை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது. குறிப்பாக எட்டாம் வகுப்பு தொடங்கி கல்லூரி படிப்பு வரை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அவ்வப்போது அவர்களுக்குத் தேவையான சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்கள் மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆண்டு தோறும் ஏராளமான சிறைவாசிகள் பொதுத் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

12th result

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மதுரை மத்திய சிறையில் உள்ள 15 தண்டனை சிறைவாசிகள் எழுதினர். இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வெழுதிய 15 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுரை மத்திய சிறையில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், சிறைவாசி ஆரோக்கிய ஜெயபிரபாகரன் என்பவர் 536 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும், அலெக்ஸ் பாண்டியன் என்பவர் 532 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும், அருண்குமார் என்பவர் 506 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

மதுரை மத்திய சிறையில் தேர்வெழுதிய 15 பேரும் தேர்ச்சி பெற்ற நிலையில், நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்ததை முன்னிட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறைத் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.