தமிழ்நாடு

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமைவது உறுதி: தமிழிசை சவுந்தரராஜன்

Rasus

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இரண்டு ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரும் என தமிழக அரசு தரப்பில் கூறப்படும் நிலையில், மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மதுரையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனர் ஹக்கிம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற தகவலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “  மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான பூர்வாங்கப் பணிகள் அனைத்தும்  துறைவாரியாக மத்திய மாநில அமைச்சகங்களின் அரசாங்க நடைமுறைப்படி செய்யப்பட்டு வருகிறது. மிகப்பெரிய திட்டத்திற்கான இறுதி திட்ட அறிக்கை தயாரானதுமே நிதிஒதுக்கி அரசாணை வரும் என்பது நடைமுறை. காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரம் அடைந்த பின்னர் 60 ஆண்டுகளில் எய்ம்ஸ் வந்தது 9 இடங்களில் மட்டுமே. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மோடியின் அரசு 14 இடங்களில் எய்ம்ஸ் மாடல் மருத்துவமனைகள் புதிதாக அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது. நிச்சயம் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி” என தெரிவித்துள்ளார்.