ஜெயக்குமார், அண்ணாமலை pt web
தமிழ்நாடு

“மதவெறி கொண்ட யானையைவிட ‘மத’வெறி பிடித்த பாஜக ஆபத்தானது” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

PT WEB

“ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை, அனைவரையும்விட உயர்ந்த இந்துத்துவா தலைவராக இருந்தார்” என கடந்த சில நாள்களுக்கு முன்பாக அண்ணாமலை பேசி இருந்தார். இது அதிமுக தலைவர்களிடையே கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தி இருந்தது. அதிமுக தலைவர்கள் பலரும் காட்டமான கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

அதோடு மட்டுமல்லாமல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜனுடன் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை, “ஜெயலலிதா இருந்திருந்தால் ராமர் கோயில் சென்று வழிபட்டிருப்பார். இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் ஜெயலலிதா. கர சேவகர்களை ஜெயலலிதா ஆதரித்தபோது. அதிமுக தலைவர்கள் எதிர்க்காதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் தொடப்ர்பாக மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையும், ``இந்துத்துவா என்பது மதம் சார்ந்தது அல்ல. அது ஒரு வாழ்வியல் முறை.., இந்துத்துவா குறித்து அதிமுகவுடன் விவாதிக்க பாஜக தயாராக உள்ளது. அதிமுக தயாரா” எனவும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான கருத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இராமர் கோவில்-பாபர் மசூதி விவகாரத்தில் மாண்புமிகு அம்மா அவர்கள் உரை!” என குறிப்பிட்டு ஆடியோ பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டிருந்ததாவது, “இரு மதங்களுக்கும் நடுநிலையாகவே தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார். இதுதான் அம்மா அவர்களின் அன்றைய உண்மையான நிலைப்பாடு. அந்த செய்தித்தாளில் வந்தது இந்த செய்தித்தாளில் வந்தது என அறமற்று கருத்துகளை பேசுவது அரசியல் முதிர்ச்சியின்மையை மக்களுக்கு காட்டுகிறது. அவர் இன்று இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரை கலங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள்.

ஒருவரது தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து மத தலைவராக மாற்ற நினைப்பது தான் பாஜகவின் எண்ணம்! ஒரு தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஒரிசாவில் வளர கூடாது என இனத்தை வைத்து அடையாளபடுத்தி பிளவுபடுத்த நினைப்பதும்

மதங்கள் கடந்து எல்லோரும் அம்மாவாக எண்ணுகிற மாபெரும்‌ சமுகநீதி காத்த தலைவரை ஒரு மத தலைவர் என சொல்லி மதத்தால் பிளவுபடுத்த நினைப்பதும் தான் பாஜகவின் கொடூர கொள்கை! தங்கள் சாதனைகளை தங்கள் தலைவர்களை பற்றி பேச முடியாமல் அம்மா அவர்கள் மீது அவதூறு பரப்பி அண்ணாமலை, தமிழிசை போன்றோர் விளம்பர தேடும் முயற்சி வீணாகும் தவிர விவாதம் ஆகாது.

ஜெயக்குமார்

முல்லை பெரியாறு விவகாரம், மேகதாது-காவிரி விவகாரம், பாலாறு விவகாரம் என தமிழ்நாட்டை சுற்றி மும்முனையிலும் இருந்து தமிழ் மண்ணிற்கு பேராபத்து நேர உள்ளது. இதில் இருந்து திசை திருப்பி திமுக அரசை காப்பாற்றவும், தங்கள் டெல்லி ஓனர்களை நோக்கி எந்த கேள்வியும் வரக்கூடாது என்பதற்காகவும், தான் ஒரு 'Proud Kannadiga' என்பதற்காகவும் இந்த அவதூறை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்.

மதவெறி கொண்ட யானையை விட 'மத'வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது. ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சினைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து இந்த பாஜக உணரப் போகிறதோ? தமிழ் மக்களின் மனங்களை வென்று இன்றும் அன்னையாக நிற்கும் அம்மாவின் புகழ் என்றும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்!” என தெரிவித்துள்ளார்.