தமிழ்நாடு

கல்வீச்சால் பதட்டம் - போலீஸ் பாதுகாப்புடன் செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலம்

rajakannan

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மீண்டும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், பலத்த போலீஸ்  பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. 

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 34 இடங்களில் விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. செங்கோட்டை விநாயகர் குழுவினர், மேலூர் வழியாக விநாயகர் ஊர்வலத்தை கொண்டு செல்லும் போது அங்குள்ள ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு கூடியிருந்தவர்களுக்கும் ஊர்வலத்தில் சென்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. 

இதையடுத்து கடும் மோதல் வெடிக்க, இரு தரப்பினரும் கற்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இந்த மோதல் சம்பவத்தின்போது கடைகள் மற்றும் வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அங்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். இதனால் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பினரையே இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் வழக்கமான பாதையில் ஊர்வலத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர், விநாயகர் சிலை ஊர்வலகத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், செங்கோட்டை மேலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்ற போது மீண்டும் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

இதனையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. பதட்டம் காரணமாக 7 மதுக்கடைகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது.