தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமியை தொடர்ந்து ஓபிஎஸ் வெளிநாடு பயணம்?  

webteam

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி,“ 41 நிறுவனங்களுடன் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இதன் மூலம் சுமார் 35 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சேலத்தில் உலகத் தரம் வாய்ந்த கால்நடை பூங்கா அமைக்கப்படும்” என முதல்வர் தெரிவித்தார். 

இந்நிலையில் முதலமைச்சரை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் வெளிநாட்டு பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் சிங்கப்பூர், சீனா அல்லது இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது வீட்டு வசதி துறை துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு கீழ் வருகின்றது. எனவே அவர் வெளிநாடு சென்று கட்டுமானம் தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய முறை ஆகியவற்றை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் சிங்கப்பூரில் நடைபெறும் கட்டுமானம் தொடர்பான கண்காட்சியிலும் துணை முதலவர் பங்கேற்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தப் பயணத்தின் தேதிகள் இன்னும் சரியாக முடிவாகவில்லை. எனினும் துணை முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதம் இருக்கலாம் என்று தகவல் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.