நாகை - இலங்கை கப்பல்  ட்விட்டர்
தமிழ்நாடு

40 ஆண்டுகளுக்கு பிறகு நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து!

webteam

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. துவக்க தினமான இன்று பயணிகளுக்கான கட்டணத்தில் 75 சதவீத அறிமுக சலுகை வழங்கப்பட்ட நிலையில், 50 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

நாகை - இலங்கை கப்பல்

கப்பல் பயணத்தை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக அமைச்சர்கள் எ.வ வேலு, ரகுபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாகை துறைமுகத்தில் இருந்து 60 கடல் மைல் தூரத்தில் இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் அமைந்துள்ளதால் 3 மணி நேரம் 30 நிமிடத்தில் இலங்கைக்கு செல்லலாம். இதன்மூலம் தென்னிந்தியாவுடன் இலங்கையின் வடக்குப் பகுதிக்கு இணைப்பு எளிதாகும். அதாவது 8 முதல் 10 மணி நேர கடினமான பயணம் இனி 3 முதல் 4 மணி நேரத்திற்குள் எளிமையாக முடியும் என கூறப்பட்டுள்ளது.

விமானத்தில் 15 கிலோ உடைமை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், கப்பலில் 55 கிலோ எடை வரை உடமைகளை எடுத்துச் செல்ல முடியும். நாகையில் இருந்து இலங்கை சென்று வர 6,000 லிட்டர் டீசல் தேவைப்படுவதால் பயணிகளுக்கான கட்டணம் 6,500 ரூபாயாக உள்ளது.

நாகை - இலங்கை கப்பல்

18 சதவீதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து மொத்தம் 7,670 ரூபாயாக பயணக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், ஆன்மீக சுற்றுலா செல்வோர், வணிகர்கள், மாணவர்கள் இந்த கப்பல் சேவை மூலம் பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.