100வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி pt desk
தமிழ்நாடு

“வெறுப்பு காட்டாமல் அன்பை பகிர்ந்தால் நலமாக இருக்கலாம்” - 100வது பிறந்தநாளில் மூதாட்டி அறிவுரை!

சென்னையில் 4 தலைமுறைகளைக் கண்ட மூதாட்டி தனது பேரப்பிள்ளைகளுடன் 100-வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை குன்றத்தூர் அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் 100 வயது மூதாட்டி லலிதா குழந்தைவேலு. 1924 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்த இவர், 2 ஆம் உலகப் போர், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் மற்றும் இந்திய சுதந்திரத்தைக் கண்டவர். இவருக்கு குழந்தைவேலு என்பவருடன் திருமணமாகி கோதை நாயகி (74), ரேணுகா தேவி (67), விஜயலட்சுமி (63) ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.

100வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி

100 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள இந்த மூதாடிக்கு பேரப் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் பெற்ற பிள்ளைகள், பேரப் பிள்ளைகளின் பிள்ளைகள் பெற்ற பிள்ளைகள் (!) என 4 தலைமுறைகள் உள்ளனர். கொள்ளுப்பேரப் பிள்ளைகள், எள்ளுப்பேரப் பிள்ளைகள் என 70க்கும் மேற்பட்டோர் இவரது குடும்பத்தில் உள்ளனர். இந்நிலையில், இவ்வருடம் இவருக்கு 100 வயது நிரம்பியதை அடுத்து, இவரது உறவினர்கள் 100 வது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடியுள்ளனர்.

குன்றத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் லலிதா பாட்டியின் நூறாவது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பாட்டியின் மகன்கள், மகள்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் என ஏராளமானோர் கலந்து கொள்ள... பாட்டி தனது 100 வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லலிதா பாட்டியின் உறவினர்கள் அவரிடம் ஆசி பெற்றனர். அதேபோல் பேரக்குழந்தைகள் பாட்டியின் நூறாவது பிறந்தநாளை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Birthday celebration

நூறு வயதிலும் சுய நினைவுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் உள்ள பாட்டி, செய்தியாளர்களிடம் பேசியபோது... “நான் இன்னும் 10 வருடங்கள் கூட உயிரோடு இருப்பேன். தற்போதுள்ள தலைமுறையினர் அவரவர் வேலையை அவர்களே செய்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நான் என் சிறுவயதில் மதுரை நகராட்சி மருத்துவமனையில் செவிலியரின் உதவியாளராக இருந்திருக்கிறேன். அப்போது சுமார் 5500 பிரசவம் பாரத்துள்ளேன். யார் மீதும் வெறுப்பு காட்டாமல் அன்பை மட்டும் பகிர்ந்தால் அனைவரும் நலமாக இருக்கலாம்” என அறிவுரை கூறினார்.