actor yogi babu pt desk
தமிழ்நாடு

சேலம்: முத்துமலை முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகிபாபு

ஆத்தூர் அருகே முத்துமலை முருகன் கோவிலில் திரைப்பட நடிகர் யோகிபாபு தனது குடும்பத்துடன் முருகன் சன்னதியில் பால் அபிஷேகம் செய்து வேண்டுதலை நிறைவேற்றினார்.

webteam

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம் பாளையம் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே முத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகப் பகுதியில் உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன் சிலை உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள், சாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர்.

yogi babu family

அரசியல் கட்சியினர் மற்றும் திரை பிரபலங்களும் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலுக்கு வந்த திரைப்பட நடிகர் யோகிபாபு தனது குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தை சுற்றிவந்த யோகிபாபு 146 அடி உயரமுள்ள முருகன் சிலை கையில் உள்ள வேலுக்கு பால் அபிஷேகம் செய்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் அலங்கரிக்கப்பட்ட முத்துமலை முருகனை குடும்பத்தாரோடு தரிசனம் செய்தார். இதையடுத்து அங்கிருந்த பொது மக்களிடமும் கோவில் நிர்வாகிகளிடமும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.