உயிரிழந்த பிரியங்கா PT WEP
தமிழ்நாடு

ராணிப்பேட்டை: வீட்டைவிட்டு வெளியே சென்ற இளம்பெண் 3 நாட்கள் கழித்து சடலமாக மீட்பு - நடந்தது என்ன?

PT WEB

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மழையூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருடைய மனைவி விமலேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இளைய மகள் பிரியங்கா (23) வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

தீயணைப்புத்துறை வீரர்கள்

இந்தநிலையில் கடந்த 3ம் தேதி காலை வீட்டை விட்டு வெளியே வந்த பிரியங்கா வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். பின்னர் ஊரின் அருகே விவசாயி கிணற்றின் அருகில் பிரியங்காவின் காலணி கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பிரியங்காவின் பெற்றோர் தீயணைப்புத்துறை வீரர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கித் தேடும் பணியில் ஈடுபட்டனர்

இதனையடுத்து நீண்ட நேரம் தேடிய பிறகும், பிரியங்கா கிடைக்காததால் தீயணைத்துறை வீரர்களும் அங்கிருந்து சென்றுள்ளனர். பிரியங்காவின் உறவினர்களும் தேடும் பணியைக் கைவிட்டனர்.

பிரியங்கா

இந்நிலையில் பிரியங்கா காணாமல் போன மூன்றாவது நாளான இன்று பிரியங்காவின் தாத்தா விடியற்காலை கிணற்றைப் பார்த்துள்ளார். அப்போது பிரியங்காவின் சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பிரியங்காவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பிரியங்கா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு யாராவது கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.