விபத்துக்குள்ளான கார் PT WEB
தமிழ்நாடு

மயிலாடுதுறை: ஆற்றுக்குள் பாய்ந்த கார்; நல்வாய்ப்பாக உயிர் தப்பிய குழந்தைகள் உட்பட 5 பேர்!

webteam

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி திவ்யா. இவர்களது குழந்தைகள் 2 பேர் மற்றும் மணிகண்டனின் தந்தை சுப்பிரமணியன் ஆகிய ஐந்து பேரும் சிதம்பரத்தில் உள்ள தங்களுடைய உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு, மீண்டும் குத்தாலத்திற்கு காரில் திரும்பியுள்ளனர்.

அப்போது சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி காரின் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து கொள்ளிடம் ஆற்றில் தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், விரைந்து சென்று காரில் சிக்கி இருந்த குழந்தைகள் உட்பட அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். பின்னர் காயமடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் காரை மீட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.